Tuesday 21 February 2012

எவரெஸ்ட் சிகரத்தின் உண்மையான உயரதை குறைத்து சொல்கிறது சீனா

எவரெஸ்ட் சிகரத்தின் உண்மையான உயரம் எவ்வளவு என்பதில் சீனா - நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.


சீனா - நேபாள எல்லையில் உள்ளது எவரெஸ்ட் சிகரம். இதுதான் உலகிலேயே மிக உயரமானது. இந்தியாவை சேர்ந்த பி.எல்.குலாடி என்ற சர்வேயர் தலைமையிலான குழுவினர், கடந்த 1954ம் ஆண்டு எவரெஸ்டின் உயரத்தை கணக்கிட்டனர். அதற்கு முன்னதாகவே 1852ம் ஆண்டு ராதாநாத் சிக்தர் என்பவர் அதன் உயரத்தை அளந்துள்ளார். அதன்பின் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848 மீட்டர் என்று நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில் மலைகளின் உயரத்தை அளக்கும் போது, அதன் மீது படர்ந்திருக்கும் பனியை கணக்கில் கொள்ள கூடாது. வெறும் மலையின் உயரத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே 8844.43 மீட்டர் உயரம்தான் எவரெஸ்ட் உள்ளது. இந்த உயரத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று நேபாளத்தை சீனா நிர்பந்தப்படுத்தி உள்ளது.

அதன்படி எவரெஸ்ட் சிகரம் 3.57 மீட்டர் உயரம் குறைத்து கணக்கிடப்படும். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், சீனா - நேபாள எல்லை பிரச்னைகள் தொடர்பாக இந்த மாதம் பேச்சு நடப்பதாக இருந்தது. அதில் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் என்ன என்ற சர்ச்சை உள்பட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட இருந்தது. ஆனால் நேபாளம் கேட்டுக் கொண்டதால் இருதரப்பு பேச்சு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றனர்.

கடந்த 75ம் ஆண்டு நேபாள - சீனா எல்லை வரைபடம் குறித்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில் எவரெஸ்டின் உயரம் 8,848.13 மீட்டர் என்று அப்போது சீனா ஒப்புக் கொண்டது. இப்போது சிகரத்தின் உயரத்தில் சர்ச்சை எழுப்பி உள்ளது. இந்த பிரச்னையை மேலும் பெரிதாக்கும் வகையில் அமெரிக்க தேசிய புவியியல் சொசைட்டி ஒரு கணக்கை கடந்த 99ம் ஆண்டு வெளியிட்டது.

இந்த சொசைட்டி கூறுகையில் ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் மூலம் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளந்த போது, 8,850 மீட்டர் உள்ளது. இந்திய சர்வேயர்கள் டிரிக்னோ மெட்ரிக் முறையில் அளந்துள்ளனர். ஜி.பி.எஸ்.தான் நவீன முறை என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments: